Monday, October 3, 2016

நீயா நானா- மருத்துவம் வளர்ந்துள்ளதா???

நீண்ட நாட்களுக்கு நீயா நானா பார்த்தேன். இன்றைய சூழ்நிலையில் மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறனா?? என்பது தலைப்பு. என்னுடைய துறை சார்ந்த தலைப்பு என்பதால், பார்க்காமல் விட முடியுமா !?!?

ஆழ்ந்த விவாதம்சற்று விசாலாமான பார்வை

உலக சுகாதார நிறுவனத்தின் படி, ” நலம் என்பது உடல், உள்ளம் மற்றும் சமூகம் நலமாக இருப்பது”. இதன் படி பார்த்தால், 100 சதவீதமும் நலமற்றவர்கள் என்று தான் கொள்ள வேண்டும்,

நவீன அறிவியலின் வளர்ச்சியினால், மருத்துவ துறை நன்கு வளர்ச்சியடைந்து என்பதை யாராலும் மறுக்க இயலாது. மருத்துவ துறை வளர்ச்சி யடைந்திருக்கிறது என்பதனாலே, மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்றும் வாதிடவும் முடியாது.

சுமார் 50 முதல் 100 ஆண்டுகளுக்கு முன்னிருந்த மருத்துவ நிலைக்கும், இன்றைய மருத்துவ நிலைக்கு ஒப்பிட்டு, நாம் பல தகவல்களை வைத்து கொண்டு, சண்டையிட்டு கொண்டிருக்கிறோம்.

ஆனால், என்னை பொறுத்தவரை இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பேன். அன்றைய நிலையில்நோய் இருந்தது: மருத்துவ முறை பெரிதாக இல்லை. ஆனால், இன்றும் நோய் இருக்கிறது. ஆனால், மருந்துகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!!!!!

பொருளாதார வளர்ச்சியை, மருத்துவ வளர்ச்சியோடு சேர்த்து குழப்பி கொள்கிறோம். பல்லாண்டு முன்னர், உணவிற்கு கஷ்டப்பட்டோம் என்பதும் உண்மை. ஆனால், இன்று எல்லாவகை உணவு கிடைக்கிறது என்பதால், மருத்துவம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. இது தவறாக புரிதலாகவே எடுத்து கொள்ள வேண்டியுள்ளது. பொருளாதார சுதந்திரம் அடைந்திருக்கிறோம்!!!! அவ்வளவு தான்..

மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு அதிகமாகி இருக்கிறது என்பது நவீனத்தின் முக்கிய அளவு கோல் எனலாம். ஆனால், அதே விழிப்புணர்வு ஆபத்தாகவும் முடிகிறது என்பது வேறு கதை.

பிறப்பு-இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. வாழ்நாள் அதிகமாகி இருக்கிறது என்பதும் மருத்துவத்தின் முக்கிய வளர்ச்சி நிலையாக எடுத்து கொள்ளலாம். ஆனால், அந்த வாழ்நாள் முழுவதும் மருத்துவரை நாடாமல் இருந்தால், வாழ்க்கை இன்னும் சுபிஷ்மாக இருக்கும். ஆனால், நடைமுறை வேறு மாதிரியாக இருக்கிறது. 20-30 வயதிலிருந்து மருந்துகள் எடுத்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாகி வருவது, வேதனை அளிப்பதாக உள்ளது.

முன் காலத்தில், அந்தந்த பூவியலுக்கு சார்ந்த உணவை மட்டுமே உண்டு வந்தோம். ஆனால், இன்றோ…. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், உங்களால் சுவைக்க இயலும்!! என்ன பொருளாதாரம் மட்டும் துணை நின்றால் போதும்!!! இத்தகைய உலகமாயமாக்கல் போக்கு தான்….. மிகப் பெரிய உடல் பிரச்சனையை, மன பிரச்சனையை உண்டு பண்ணுகிறது.

முன்னர் ஊட்டச்சத்து சார்ந்த பிரச்சனைகளும், தொற்று நோய் பிரச்சனைகளும் அதிகமாக இருந்தன. ஆனால், இன்றோ…. மேற்கண்ட நோய்கள் பெருமளவு குறைந்து…. வாழ்வியல் சார்ந்த நோய்கள்(non-communicable) அதிகமாகி உள்ளது.

Anti-biotic கண்டுபிடிப்பு என்பது மருத்துவ துறையில் முக்கியமான மைல்கல் எனலாம். அதனால், தொற்று நோய்கள் குறைந்தன. அது போல், பொருளாதாரத்தினால்ஊட்டச்சத்து நோய்கள் குறைந்தன (இந்தியா அனீமியா அதிகம் என்பதும் மற்றொமொரு உண்மை ).

அத்தகைய பொருளாதார தன்னிறைவு, உடல் உழைப்பினை குறைத்து, மன உழைப்பினை அதிகப்படுத்தியது. இதனால் இருதய நோய்கள், புற்று நோய் போன்றவற்றை அதிகப்படுத்தியது. மன அழுத்தம் போன்ற உள பிரச்சனைகளும் அதிகமாகியது.

என்னை பொறுத்தவரை, ஒவ்வொரு காலத்திலும், நோய் என்பது இருந்து கொண்டு தான் இருக்கும். அதன் மருத்துவ வழிமுறையும் வடிவமும் மாறுமே தவிர, நோயற்ற ஆரோக்கிய நிலை என்பது கானல் நீரினை ஒத்ததே!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment