Friday, October 7, 2016

புகுந்த வீடும் பெண்ணின் மனநிலையும்

” பெண்கள் திருமணமானவுடன், புதிய இடத்தில் வாழ்வது என்பது மிக கடினமான காரியமாற்றே!!! பெண்கள்களால் எப்படி சமாளிக்க முடிகிறது என்றார் நண்பர் ஒருவர். அந்த தருணத்தில், அவருக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. ஆண் சமுதாயம் மனதளவில், ஆணாதிக்க மனநிலையை விட்டு விடபட தொடங்கி விட்டது என்று நினைத்து கொண்டு, கீழ்க்கண்ட பதிலை சொல்லி சமாளித்தேன்.

இளம் வயதிலிருந்து, வேறொரு இடத்தில் வாழ போகிறாய் என்பதை பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஆதலால் பெரியளவு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றேன். இந்த நிகழ்வு நடந்து 7 ஆண்டுகளாகி விட்ட நிலையிலும் , அந்த கேள்வியின் ஆழம்…… என் மனதை விட்டு அகலவில்லை. தமிழ் சமூகத்தின் பெண்ணியத்தை மையப்படுத்திய பழக்க வழக்கங்களை பற்றி யோசித்து பார்க்கையில், இந்த கேள்விக்கே அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.

ஒவ்வொரு குடும்ப நிகழ்வுகளிலும், கணவன் – மனைவி இருவரில், மனைவியின் உறவு சார்ந்த சடங்குகளே அதிகமாக இருக்கும். அதாவது கணவன் உறவு சார்ந்த பங்களிப்பு என்பது மிக குறைவே!!!

கணவன் சார்ந்த உறவுகளாகிய (பங்காளிகள்), பெரும்பாலும், அந்த ஆணின் சுற்றத்தாராகவே இருப்பதால், ஆணிற்கு பிரிவு வலி என்பதே இல்லை!! மாறாக அருகில் இருப்பதால், பங்காளி பிரச்சனைகளே அதிகம். ஆனால்.. மனைவி(பெண்ணின்) நிலை என்பது நேர் எதிரானது.

ஆதலால் தான் குடும்ப உறவுகளுக்குள் திருமணம் என்பது பெண்ணின் மனநிலையிற்கு சற்று ஆறுதல் அளிக்க கூடியதாக உள்ளது. அத்தை/ மாமன் வீட்டு மகனை திருமணம் செய்யும் போது புகுந்த இடத்தில் உள்ளவர்கள், பழகியவர்கள் என்பதால், மனம் எளிதாக ஏற்று கொள்ளும்.. (பொருளாதாரம் வெளியே சென்று விட கூடாது என்பதற்காக, உறவுக்குள் திருமணம் என்ற கருத்தும் உண்டு).

ஆனால் இன்றைய சுழ்நிலையில் மாறி விட்டது. கல்வி முதல் பொருளாதாரம் சுதந்திரம் வரை பெற்று விட்டதால், அனைவருடன் பழகும் வாய்ப்பு அதிகமாகவே கிடைக்கிறது. ஆதலால், புகுந்த இடத்தை எளிதாக ஏற்று கொள்ள இயலும்.

ஒரு பெண் திருமணமாகுதல் தொடங்கி இறப்பு வரை, அந்த பெண்ணின் தந்தை/ அண்ணன் /தம்பி ஆகியோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். அதில்.. பொங்கல் மற்றும் தீபாவளிகளுக்கு அளிக்கப்படும் வரிசை முக்கியமானது. அத்தருணங்களில், பெண்ணின் மனதில் ஏற்படும் உள களிப்பை வார்த்தைகளால் அளவிட முடியாது.

இன்றைய சூழ்நிலையில் வேண்டுமானால், பெண்ணின் பிறந்த வீட்டிற்கு செல்வது எளிதானது. ஆனால், பழங்காலத்தின் பெண்னை பார்ப்பதற்காக வழிமுறைகளாக, தீபாவளி மற்றும் பொங்கல் வரிசை அமைந்தது என்றால் மிகையாகாது!!!! ஆனால் இந்த வரிசையின் மகத்துவம்.. 
இன்றளவில் பெருமளவும் குறைந்துள்ளது. அன்பு பரிமாற்றங்கள் குறைந்து, வெறும் சடங்காக மாறி உள்ளது என்பது நிகழ்கால உண்மை.

அது போல்.. குழந்தை பிறப்பு என்பது தாய் விட்டிலே நடைபெறும். அத்தருணங்களில். தன் கணவனை காட்டிலும். தன் தாயின் பாதுகாப்பு முக்கியமானதாக பெண் கருதுவாள். இன்றைய சூழ்நிலையில் மருத்துவமனையில் நடந்தாலும், அம்மருத்துவமனையிலும். பெண் குடும்பத்தரே முக்கியத்துவம் பெறுகின்றனர்.

இவ்வாறாக.. பெண்ணின், ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும், பெண்ணின் குடும்பம் சார்ந்த சடங்குகளே முக்கியத்துவம் பெற்று, பெண்ணின் பிரிதல் வலியை, குறைக்க முயல்கிறது. தந்தை/தாய் இறந்து பிறகு அப்பொறுப்பு, அண்ணன்/தம்பிக்கோ வந்து விடுகிறது. இறப்பு வரை பெண்ணின் பந்தம், பிறந்த வீட்டோடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தமிழ் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் பல சடங்குகள், இன்றைய நவீன சமூகத்திற்கு தேவையில்லை என்பதால், சில சடங்குகள் வழக்கொழிந்து போய் விட்டது. பல சடங்குகள் பாசத்தை மறைத்து. பணம் முன்னிறுத்துவதாக மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது என்பது தான் வித்தியாசம்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment