Saturday, December 8, 2018

கஜா புயலும் செல்ல பிராணிகளும்

மனிதனின் பாதிப்புகள் அதிகம் என்றாலும்…… அதை தாண்டி மிருகங்கள் படும் அவஸ்தைகள் அதிகம்!!!!
எனது வீட்டில் இருக்கும் ஆடுகள் மட்டுமே இருக்கிறது. வாயற்ற ஜீவனின் வாயாக(ஆட்டின்) கருத்தை தெரிவிக்கிறேன்.
ஆட்டிற்கு தேவையான பசும்தழைகள் கிடைப்பதில்லை. எங்களது ஊரில் சவுக்கு தழையே ஆடுகளுக்கு அதிகம் பயன்படும், அது முழுவதும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவிற்கு திண்டாட வைக்கிறது. ஆடுகளினை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொசு கடியினால், மனிதனே எவ்வாறு தற்காத்து கொள்ள முடியாத நிலையில், ஆடுகளின் நிலை சொல்லி மாளாது!!!!
தினமும் 3 கொசுவர்த்தி சுருள் கொசு அடிக்கும் பேட்……. இவ்வாறாக பல யுத்திகளை பயன்படுத்தியும் பிரயோஜனமில்லை!!!! ஆடுகள் படுத்து உறங்குவதும் கிடையாது!!! பரிதாப நிலையே மிஞ்சுகிறது!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Wednesday, December 5, 2018

கஜா புயலும் பின்நவீனத்துவ புரிதலும்

கஜா புயல் மொத்த வாழ்வதாரத்தை புரட்டி போட்டாலும், இயற்கை நமக்கு கற்று தந்திருக்கின்ற பாடங்கள் ஏராளம் என்பேன்!!!!
சுயசார்பையும் இயற்கையையும் விட்டு விலகி பல வருடங்களாகி விட்டது. அதை உணர்த்தும் வகையில், இப்புயல் அமைந்தது எனலாம்.
மின்சாரம் இல்லாத நிலையினை, துக்கமாக கருதாமல்…. நம்முடைய தந்தையும் தாத்தாவும் வாழ்ந்த காலத்தினை எண்ணி பார்க்க வேண்டும். மின்சார மோட்டர் இல்லாமல்… கை பம்பின் மூலம் தண்ணீர் அடித்து உபயோகம் செய்ததை புரிய வைத்திருக்கிறது. மிக்சி, கிரைண்டர் இல்லாமல், அம்மி மூலம் அரைத்து காலத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
உடனே…. நான் அறிவியல் சாதனத்தை எதிர்க்கிறேன் என்று எடுத்து கொள்ள வேண்டாம். முழுவதும் அறிவியல் சாதனத்தையே நம்பி… நம்முடைய சுயத்தை இழந்து, செய்வதுறியாது திகைத்து நிற்கிறோம்!?!?! அதை புரிந்து கொள்ள வேண்டும்.
புயல் அடித்து, ஒரு வாரம் கழித்து, திருநாரணயனன் சார், ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார். “நகர் புறங்களில் பால் கிடைப்பதில் பிரச்சனையிருக்கும். ஆனால், கிராம புறங்களில் ஏன் பால் கிடைப்பதில்லை??” என்றார். சற்று சிந்திக்க வைத்த கேள்வி. கிராம புறங்களில் மாடு வளர்க்கும் பழக்கம் முழுவதும் மறைந்து விட்டது. அனைவரும் பால் பாக்கெட்டினை நோக்கி தாவி விட்டனர். எனது வீட்டில் கூட, 10-15 வருடங்களுக்கு முன்னரே வளர்த்த மாடுகளினையே விற்றாயிற்று. இது தான்….. கிராமம் தன்னுடைய சுயத்தை இழந்ததன் எடுத்து காட்டு!!!!
புளூ கலர் டாடா சீட், ஆஸ்பெடஸ் சீட் போன்ற பாதிப்புகளை எற்படுத்தும் பொருட்களை, இப்புயல் மூலம் இயற்கை சற்றே குறைத்திருக்கிறது எனலாம், புத்தம் புதிய மரங்களையும் செடிகளையும் வளர்க்கும் எண்ணத்தை பொது மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை வெள்ளம், உத்ரகாண்ட் வெள்ளம், கேரளா வெள்ளம்……. இப்படியாக பல வெள்ள பாதிப்புகள், பல ஆக்கிரப்புகளை அகற்றியது. அந்த வகையில், கஜா புயல் இயற்கையை புதுப்பித்து கொண்டதாக கூட புரிந்து கொள்ளலலாம்!!!!
” இருக்க இடம், சாப்பிட உணவு, உடுத்த ஆடை…… இதெல்லாம் கிடைக்காம எல்லாரும் கஷ்டப்படுறாங்க……… நீ என்னாடன்னா…. இப்படி கிறுக்கு மாதிரி பேசுற “ நீங்க நினைக்கிறது புரியது……. என்ன பண்றது…. மூளை கிறுக்கு மாதிரி யோசிக்கிதே!!!! (கொஞ்சம் பின் நவீனத்துவமாக யோசித்து பார்த்தேன். அவ்வளவு தான்)

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Sunday, December 2, 2018

கஜா புயல்

கஜாவின் கோர தாண்டவம், சொல்லான துயரினை ஏற்படுத்தி சென்றிருக்கிறது. இதை எங்ஙனம் விவரிப்பது என்று கூட தெரியவில்லை. சொன்னால் கூட, எத்தனை பேர் முழுமையாக தெரிந்து/புரிந்து கொள்வார்கள் என்று கூட யூகிக்க முடியவில்லை.
வாழ்க்கையினை பூஜியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலை!!! பணக்காரர், எழை என்ற பாகுபாடெல்லாம் இல்லை!!! பணக்காரனுக்கு லட்சங்களில் இழப்பு என்றால், ஏழைகளுக்கு பத்தாயிரங்களில் இழப்பு!!! பலருக்கு வாழ்க்கையே சூன்யமாக தெரிகிறது.
கடந்த பல வருடங்களாகவே…. இந்தியாவே பொருளாதார ரீதியாக சிக்குண்டு இருக்கும் போது, டெல்டா பகுதிவாசிகளின் பொருளாதாரத்தினை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து சென்றிருக்கிறது,
கஜாவினால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள், மத்திய தர வர்க்கத்தினரே!!! அவர்களே குடிசை வீடுகளை விடுத்து ஒட்டு வீடுகளை, ஆஸ்படாஸ் சீட்டுகளை பயன்படுத்தி வந்தனர். பழைய நிலைமைக்கு திரும்ப 5-10 ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவும் நிச்சயமானதல்ல!!!
மனித உயிர்களின் இழப்பு குறைவு என்பது சற்று ஆறுதலான விஷயம். ஆனால், புயலினை தொடர்ந்த மரணங்கள் அதிகம் என்பது கவனிக்க தக்கது.
மனிதனின் நிலைமையே மோசம் எனும் போது, மிருகங்கள் மற்றும் பறவைகளை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. புயலின் மறுநாள் காலையில், புயலில் தப்பித்து ஒன்றி நின்ற அணில் குஞ்சின் பயம், இன்றும் ரணமாய் மனதில் நிற்கிறது.
அப்படியே தப்பி பிழைத்தாலும், அதற்கு உணவில்லாமல் அல்லாடும் நிலைமையே காணப்படுகிறது. அதிலும் பறவைகளில் நிலைமை இன்னும் மோசம்!!! காகங்களும், அணில்களில் திசையறியாது நிற்கிறது. மாடுகளுக்கு வைக்கோல் இல்லை!!! ஆடுகளுக்கு பசுங் தழைகள் இல்லை!!! எங்களது வீட்டில் கூட, அதற்குள் மூன்று ஆடுகளையும் விற்றாகி விட்டது.
ஒரு தலைமுறையின் உழைப்பான மரங்கள் அனைத்தும் சருகுகளாக மண்ணில் நிற்கின்றன. அதிலும் தென்னை, மா மற்றும் முந்திரி மரங்கள் அதிகம்!!! தென்னையையே நம்பி இருக்கும் விவசாயிகள் எண்ணி பாருங்கள். வேதாரண்யத்தில் அனைத்தும் வீடுகளில், மேற்கண்ட அனைத்திலும் ஒன்றிரண்டு மரமாவது இருக்கும். ஒட்டு மொத்த உபரி வருமானமும் கட்!!! அதனையே முழு வருமான கொண்ட, புஷ்பவனம், பட்டுகோட்டை பகுதிவாசிகளின் நிலையை, சொல்லி தெரியவேண்டியதில்லை!!!
உண்மையிலேயே உணவிற்கு வருந்தும் மக்கள் ஒருபுறம், தேவையான பொருட்கள் ஒருந்தும், இன்னும் அதிகமான பொருட்களை சேர்க்க வேண்டும் என்று எண்ணும் மக்கள் மறுபுறம்!!!!
என்னுடைய தனிப்பட்ட பாதிப்புகள் ஒருபுறம்!!! மொத்த சமூகத்தின் பாதிப்புகள் மறுபுறம்!!!! அரசு ஊழியராக, மருத்துவ பணி ஆற்ற வேண்டிய கடமை மற்றொரு புறம்!!! இப்படியாக ஒய்வற்று நிற்கிறேன் 15 தினங்களாக!!! பல தினங்களில் மதிய உணவை பற்றி யோசித்ததே யில்லை!!!
பல துயரங்களை தாண்டி, அனுபவங்கள் அதிகம்!!!! பலருக்கு பதில் கூட அளிக்க இயவில்லை!!!
கஜா புயலை பாதிக்கப்பட்டவர்களுக்காக, பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் வலு சேர்த்தவர்களுக்கு நன்றிகள் பல!!! கஜா புயலின் போது பணியாற்றிய அனைத்து துறை நண்பர்களின் களப்பணியும் பாராட்டிற்குரியது!!!!
வாழை மரமானது, புயலினால் ஒடிந்தாலும், அது திரும்ப துளிர்த்து வரும் தன்மை உடையது!!!! அந்த மனநிலை, டெல்டா பகுதி வாசிகளுக்கு தேவைப்படுகிறது. இழப்புகள் அதிகம் என்பது உண்மை…. அதை தாண்டியும், அடுத்த அடியை எடுத்து வைப்பது அவசியம்!!!! மனம் உறுதி கொள்வோம்!!! மீட்டு எடுப்போம்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்