Saturday, December 30, 2017

புத்தாண்டு வாழ்த்துகள்!!!


2017 ஆம் ஆண்டு எப்படி கடந்தது என்று எல்லோரும் எழுதுறாங்க!!! நானும் எழுதுலாம் பார்த்தா…. ஒன்னுமே நியாபகம் இல்லை!!! எதாவுது உருப்புடியா பண்ணா தானே வரும்!?!?!?!?

எந்த எதிர்ப்பார்ப்புகள் இல்லாத தொடக்கத்தினால், எவ்வித வருத்தங்களும் பெரிதாக இல்லை!!! தினம் ஒரு மேனியாய், விடுமுறைகள் கூட அற்று, வருடம் உருண்டோடியது!!!

வருடத்தின் ஆரம்பத்தில், மருத்துவமனையில் மூலிகை தோட்டம் அமைத்தேன். மூலிகைகளின் எண்ணிக்கையை அதிகமாகவில்லையே தவிர, இருக்கும் மூலிகைகள் சிறப்பாகவே உள்ளது!! அதை இன்னும் செம்மைப்படுத்த வேண்டியது அவசியம்!!!

செம்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பரவிய டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக நிலவேம்பு குடிநீர் வழங்கினோம்! பள்ளி, கல்லூரி மற்றும் பேருந்து நிலையங்கள் என பட்டியல் நீண்டது. மனநிறைவு தந்தது!!! நிறைய அதிகாரிகளுடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததால், என்னுடைய நட்பு வட்டம் விசாலமாகியது!!!

மருத்துவ துறையின் தனிப்பயிற்சியில் பெரியளவு முன்னேற்றம் இல்லை. மந்த நிலையிலேயே தொடர்கிறது.

குடும்பத்தின் பொருளாதார சுமையை, பெரியளவு குறைந்ததுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் தங்கைக்கு ஆய்வக உதவியாளர் பணி கிடைத்தது. கூடுதல் மன மகிழ்ச்சியை தந்தது!!

புத்தக வாசிப்பில், நினைவில் வருவமளவிற்கு பெரிய பட்டியல் இல்லை. எமோஷனல் இண்டலெஜிண்ட், இந்திய ஞானம், கெளதம சித்தார்த்தனின் சில நூல்கள் என்ற சில மட்டுமே நினைவில் வருகிறது. படிக்க ஆரம்பித்து, பாதியில் நிற்பவை பல!!! இன்னும் வாசிப்பை கூட்ட வேண்டும்புத்தக வாசிப்பை தாண்டி, பொது வெளியில் வாசிப்பை அதிகமானால், புத்தக வாசிப்பு குறைந்துள்ளது!!!!

ஆண்டின் மத்தியில், மருத்துவ தேர்வு வாரியத்தின் மருத்துவ அலுவலர் தேர்வுக்காக, சுமார் 18 வினா-விடை தொகுப்பை எடுத்து தந்தேன்!! பல மருத்துவர்களுக்கு உதவி இருக்கும் என்று எண்ணுகிறேன்!!!

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின், group II A மற்றும் group IV ஆகிய இரு தேர்வுகளுக்காக இலவச வகுப்புகள் நடத்தினோம்!! அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரு பாடங்களை எடுத்தேன்/ எடுத்து கொண்டிருக்கிறேன். இதுவும் மிகவும் மன நிறைவு தருகிறது. வார இறுதி விடுமுறை நாட்கள், பெரும்பாலும், இப்படியாகவே கழிகிறது!!!

தமிழ்நாடு அரசின் நிர்வாக துறை சார்ந்த நிறைய தகவல்களை கற்று வருகிறேன். திரைப்படங்கள் பார்த்து மாதங்கள் கூட ஆகிவிட்டது. முகநூல் மற்றும் கட்செவி பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்!!!

நண்பர்கள் குருமணிகண்டன் மற்றும் வித்யாபதி திருமணத்தினை தாண்டி, வெளி பயணங்கள் செல்லவில்லை. சுனில் அண்ணனின் தாத்தா நூற்றாண்டு விழாவிற்கு செல்லவும் வாய்ப்பு கிட்டியது!!! சென்னைக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம், இரண்டு ஆண்டுகளாக கிடப்பிலேயே இருக்கிறது!!!

புகைப்படம் சார்ந்த ஆர்வம் அதிகமாகி இருக்கிறது!! அதில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும்!!! ஒவிய தாகத்தை இன்னும் தொடங்கவே யில்லை!!! தமிழ் எழுத்து நடையில் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக எண்ணுகிறேன்

வெளியுலகத்தின் பார்வையில் வெற்றியின் குறியீடாக இருக்கும் எதுவும், என்னுடைய கால பெட்டகத்தில் இருக்காது!!! என்னுடைய தேடல் வெளியுலகம் சார்ந்தல்ல!! அக புரிதல் நோக்கியே பயணித்து கொண்டிருக்கிறேன்!!! 2017 ஆம் ஆண்டில், அகம் சார்ந்த புரிதலில் சற்று தன்னிறைவை அடைந்தாகவே உணர்கிறேன்!!!

வெற்றிகளை விட தோல்விகளே, என்னை அர்த்த படுத்துவதாக எண்ணுகிறேன்!!! அடுத்த வருடம் குறித்து, எந்த திட்டமும் இல்லை. பார்க்கலாம்!!! என்ன நடக்க போகிறது என்று!!!

அனைவரும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, December 12, 2017

புனைவுகளும் சமூக சிக்கல்களும்


எனக்கு புனைவுகள் மீது நம்பிக்கை எப்போதும் இருந்ததில்லை. ஆதலால், சிறுகதைகளுக்கும் பெரும் நாவல்களுக்கும், எனக்கு வெகு தூரம்!!!! ஆனால், வாழ்க்கையை அழகாக்க பல புனைவுகள் தேவைப்படுகிறது என்பதே நிதர்சனம்!!!

அதில் காதலும் திருமணமும் முக்கியம் என்பேன்!!! மனிதன் வாழ்க்கையில், பல விதமான வாழ்வியல் நடைமுறைகளை கடந்தே வருகிறான். அதில் ஒன்று தான், காதலும் கல்யாணமும்!!!

இதை, தினசரி செய்கைகளில் ஒன்றாக நினைத்து கடந்தால், ஒன்றும் பிரச்சனையிருக்காது. காதல் மற்றும் திருமணம் சார்ந்த சமூக புனைவு, அதனை சிக்கலாக்கி விடுகிறது. இதனை சார்ந்த வணிகமும், அதீத புனைவையே விரும்புகிறது.

காதல் சார்ந்த புனைவு இல்லையென்றால், இன்றைய திரைப்பட வளர்ச்சியும் கவிதை தொகுப்புகளும் இல்லாமல் இருந்திருக்கும். திருமணம் சார்ந்த புனைவு இல்லாமல் இருந்திருந்தால், அதனை சார்ந்த வணிகமும், ஜோதிடமும், திருமண அமைப்பாளர் முறை வளர்ந்திருக்காது….

ஆனால், மேற்கண்ட புனைவு இல்லாமல் இருந்திருந்தால், வாழ்க்கை ரசத்தை சுவைத்திருக்க முடியாது என்பதும் உண்மை!!!

புனைவுகள் தான், வாழ்க்கையை அழகாக்கின்றன. அந்த புனைவுகளே அதிகமாகும் போது, வாழ்க்கையை சிக்கலாகி விடுகின்றன. எதிர்ப்பார்ப்புகளை அதிகமாக்கி, காதலையும் திருமணைத்தையும் கேலி கூத்தாக்கி விடுகின்றன.

இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டியது அவசியம் தான்!!! ஆனால், இன்றைய அதீத புனைவு சார்ந்த புரிதல், இரத்த சர்க்கரை அளவை அதிகமாக்கி, வாழ்வியலையும் சமூகத்தையும் சிக்கலாக்கி விடுகிறது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, December 7, 2017

மன நிறைவும், மன கிலேசங்களும்


” மனநிறைவை தந்து விடும் செயல், உலகில் உண்டோ??? ” என்று பல நேரங்களில் எண்ணுவது உண்டு. நிரந்தரமாக மனநிறைவை தந்து விடும் செயல் நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். ஆனால், தற்காலிகமாக, மனநிறைவை தந்து விடும் செயல்/நிகழ்வு உண்டென்றே கருதுகிறேன்.

வேலை தேடி கொண்டிருப்பவனுக்கு, அரசாங்க வேலை கிடைக்கும் போது, மனநிறைவு உண்டாகும். திருமணத்தினை எதிர்ப்பார்த்து கொண்டிருப்பவனுக்கு, திருமண நிகழ்வு மனநிறைவை தரலாம். அது போல், பிள்ளை பேறு, போட்டியில் வெல்லுதல், விளையாட்டில் சிறப்பு நிலை பெறுதல் என பட்டியல் நீளும். ஆனால், இவையெல்லாம், தற்காலிக மன நிறைவையே தரும்!!!

மாஸ்லோ படிநிலை தேவை(Maslow's hierarchy of needs ) அடிப்படையில், மேற்கண்ட அனைத்தும், தற்காலிக தீர்வுகளே!!! ஒரு தேவை கிடைத்து விட்டால், மற்றொரு தேவை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடும்.

எ.கா. வேலை கிடைத்தால் போதும் என்று போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருப்போம். போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று விட்டால், நல்ல துறை வேண்டும் என்று எண்ணுவோம். அந்த வேலை எளிதாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். அந்த வேலை, நமது விட்டுக்கு அருகிலோ இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். இப்படியாக விருப்பங்கள் மாறி கொண்டோ இருக்குமே தவிர, நிலைபெற்று முடிவாக, எதிலும் மனநிறைவு அடைய மாட்டோம்!!!

இது மனித எண்ணத்தின் தவறன்று!!! கால சூழ்நிலையில் அகப்பட்டு கொள்ளும், சுழ்நிலை கைதியின் தவறு!!! எதிர்ப்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை பெற, நாம் ஒன்றும் முனிவரல்ல!!! இத்தகைய முரண்பாடுகளே, வாழ்க்கை சுவராசியம் அடைகிறது. சரி அதை விடுங்கள்!!!

எனக்கும், மேற்கண்ட தற்காலிக மனநிறைவு ஏற்பட்ட தருணங்களும் உண்டு!!! இதையெல்லாம் தாண்டி, மனநிறைவு தரும் இன்னொரு விஷயமும் உண்டு!!! அது வேறொன்றுமில்லை!! புத்தக வாசிப்பு தான்!!!

தினமும் வாசிப்பின் மூலம், பல்வேறு தகவல்களை பெற்று கொண்டே இருப்பேன்!!! அதற்கு எல்லையும் கிடையாது!!! தகவல்கள் பெறாத நாள், முழுமையற்ற நாளாக கடந்து போனதாக உணர்ந்த தருணங்களும் உண்டு!!!

அதற்கு நேர் எதிர் மாறாக, சில தினங்கள் மனநிறைவினை பெற்று, தூக்கமற்ற இரவுகளாக கடந்த தருணங்களும் உண்டு!!! நேற்றைய தினம், தமிழ்நாட்டு நிர்வாகம் சம்பந்தமான தகவல்களை சேகரித்த போது, அம்மனநிறைவு ஏற்பட்டது.

இத்தகைய நிலை, ஏற்கனவே பல தருணங்களில் ஏற்பட்டதுண்டு. சித்த மருத்துவ தத்துவம், உளவியல், வாழ்வியல் புரிதல், இறை நம்பிக்கை புரிதல், மூடநம்பிக்கை சார்ந்த இறையியல், இந்திய தத்துவ ஞானம் என்று பட்டியல் அதிகமாக உள்ளது.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் –”

என்ற குறள் கூட உண்மை தான் போலும்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்