Sunday, September 21, 2014

அறிவுரைகள் இலவசம்

இங்கு அறிவுரைகள் இலவசமாக வழங்கப்படும் என்ற போர்டு மட்டும் தான் இல்லை. மற்றப்படி, அனைத்து வகையான இலவச ஆலோசனைகளை தர, பல மனிதர்கள் காத்து கொண்டு தான் இருக்கிறார்கள். டீக்கடையாகவோ, பொது மேடையாகவோ, வீட்டிலோ, டிவியிலோ, அல்லது நண்பர்கள் கூடும் இடங்களிலோ, இதில் எங்கு வேண்டுமானாலும் இலவச அறிவுரைகளை பெற்று கொள்ளலாம். அது மனநலம் பற்றியோ, உடல்நலம் பற்றியோ, வருமானம் பற்றியோ, தொழில் தொடங்குவது பற்றியோ, இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டு போகும். ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய சக மனிதனும் பல அறிவுரைகளை வழங்கி கொண்டே இருக்கிறான். அதற்கு வரைமுறை எல்லைகள் கிடையாது. இருக்கவும் போவதும் இல்லை.

அப்படி வழங்க வேண்டி அவசியம் தான் என்ன??? தன்னுடன் வாழும் சக மனிதனின், வாழ்வியல் துன்பத்தை நீக்க, தனக்கு தெரிந்த வழிமுறைகளை வழங்கி வருகிறான். அப்படி வழங்கப்படும் போது, ” தன்னால் முடிந்த உதவியை செய்து விட்டதாக மனதிற்குள் பெருமையும் கொள்கிறாள் “. அதுவொன்றும் பெரிய தவறல்ல; அது பெருமை பட வேண்டிய ஒன்று தான். மற்றவனுடைய துன்பத்திற்கு சிறு விடை காணும் அவனுடைய முயற்சி பாராட்டுக்குரியதே.

ஆனால், அவனால் வழங்கப்படுகின்ற அனைத்தும் மற்றவர்களால் ஏற்று கொள்ளப்படுகிறதா?? என்பதில் நிறைய வேறுபாடுகள் உண்டு. அனுபவம், வயது, கல்வி தகுதி மற்றும் சமூகத்தில் உள்ள நிலையை பொறுத்தும் மாறும். அதே போல், அவர் கூறும் அனைத்தும் உண்மையா?? அல்லது நடைமுறை சாத்தியமா? என்பதும் கொஞ்சம் கடினம் தான்.

ஆனால், இதையே தான் படித்தவர்கள், தனியாக பட்டம் பெற்று மருத்துவர்களாகவும், உளவியல் ஆலோசர்களாகவும், இஞ்சினியர்களாகவும், வக்கீல்களாகவும், பொருளாதார ஆலோசர்களாகவும் உள்ளனர். ஆனால் இவர்கள் வணிக நோக்கோடு செய்யும் வேலையை, பலர் இலவசமாக செய்வது போற்ற கூடியதாக உள்ளது. படித்தவர்களுக்கும், இலவச அறிவுரை வழங்குபவர்களுக்கும் உள்ள வேறுபாடுகளை இங்கு விவாதிக்க வேண்டாம்.

இதை தாண்டி, இன்னொரு விவாதத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அது என்னவெனில், மற்றவருக்கு இலவச அறிவுரை சொல்லும் மனிதன், தன்னுடைய வாழ்வியலில் அனைத்து நிலைகளையும் கடைபிடிக்கிறானா?? என்பது தான். அவ்வாறு கடைபிடித்து பெரிய மாற்றங்களை அடைந்ததாக தெரியவில்லை. அப்படி கடைபிடித்து இருந்தால், அவனும் தன்னுடைய பிரச்சனையிலிருந்து எளிதாக விடுதலையாகி இருப்பான். அதன் பின்னால் இருக்கும் உளவியலையும் சற்று ஆராய வேண்டி உள்ளது. மற்றவருடைய பிரச்சனைக்கு, தெளிவாக அறிவுரை சொல்லுபவன், தன்னுடைய பிரச்சனையில் முடிவு எடுக்க பயப்படுகிறான். எதாவது தப்பாக நடந்து விடுமோ என்ற மனநிலை அவனுள் வந்து விடுகிறது. இது மனிதனின் எதார்த்த மனநிலையே.

இந்த மனநிலையை எப்படி எடுத்து கொள்வதெற்கு தெரியவில்லை. அப்படி அமைந்த சில உதாரணங்களையும் கூறலாம். ஒரு நண்பர், பல உளவியல் பிரச்சனைகள் உள்ளதாக சொன்னார். அவர் மேலும் ,” நான் பலபேருடைய பிரச்சனைகளை தீர்த்து வைத்து இருக்கிறேன். ஆனால், என்னுடைய பிரச்சனையை தீர்க்க வழி தெரியவில்லை…” என்றார்.
ஒருவர் சர்க்கரை வியாதிக்கு மருந்து வேண்டுமென்று, என்னிடம் வந்தார். பாரஸ்ட் ஆபிசராகவும் உள்ளதாகவும் கூறினார். அவருக்கு பல மூலிகைகளையும், அவற்றின் பயன்களையும் தெரியும் என்று சொன்னார். சர்க்கரை வியாதிக்கு என்ன மூலிகை சாப்பிட வேண்டுமென்று அவருக்கு தெரியும். ஆனாலும் 10 வருடமாக ஆங்கில மருத்துவம் தான் எடுத்து கொண்டு இருக்கிறார். அவருக்கு நான் எப்படி அறிவுரை சொல்வது?? இதெல்லாம், நான் கவனித்தவை. கவனிக்காமால் நிறைய சம்பவங்கள் உள்ளன.

இந்த கல் மோதிரம் போட்டா, கோடி கோடியாய் சாம்பாதிக்கலாம், வாஸ்து படி வீடு கட்டினாலும் செல்வம் கொழிக்கும், இந்த மந்திர தகட்டை கடையில் வைத்தால், வியாபாரம் கொழிக்கும் போன்ற சாம்பிரதாயங்களையும், மேற்கண்டவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மனதில் கொஞ்சம் நகைப்பு தான் மிஞ்சம். இப்படி சாம்பிரதாயங்களை சொல்பவர்களும் , தன்னுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை அடைந்ததாக தெரியவில்லை.

இப்படியாக சக மனிதனின் துயரங்களை நீக்க முயலும் மனித தன்மை போற்றதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அந்த நபருக்கு ஏற்றது தானா, அவர் அதை ஏற்று கொண்டு கடைப்பிடிப்பாரா என்பதை சிறிது கவனிக்கவும் மறந்து விடாதீர்கள். அதை போல் நீங்களும், அதை கடைபிடித்து ,மற்றவருக்கு கூறினால், அதன் மீதான நம்பிக்கை கூடும்.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment