Saturday, September 20, 2014

மஞ்சப்பை

மஞ்சள் பைஎன்றவுடன், சற்றென்று மின்னலாய் மனதில் ஒடி வருவது ராஜ்கிரண் நடித்த திரைப்படம் தான். ஆனால், எம் மனம் என்னவோ, மஞ்சள் பை தூக்கி சென்ற, பள்ளி கூட நினைவலைகளே வந்து நிற்கிறது.  எத்தனையோ கடந்த கால நிழற்படங்களை, நம் மனது பிரதியெடுத்தாலும் பள்ளி கூட நினைவுகள் மட்டும் மாறாத பசுமை கொண்டவை.

ஒரு அரிச்சுவடி புக்கும், , ஆ எழுத சிலேட்டும் குச்சியும், மதிய சாப்பாடுக்கு தட்டும் எடுத்து பையில் போட்டு கொண்டு, அவ்வை சண்முகி படத்தின் கமலை போல, பையை தோலில் போட்டு கொண்டு, வீரமாய் கிளம்புவது தனி சுகம் தான். இப்போது நினைத்தாலும், உடல் சிலிர்க்கிறது. புத்தகங்களும் பெரிய சுமையாக இல்லாததால், மானை போல துள்ளி ஒடிய நினைவுகள் நெஞ்சில் நிற்பவை. அது பெரும்பாலும் ராஜா சில்க், ராதிகா சில்க் ஹவுஸ் பையாகவே இருக்கும்.

நான் படித்த மாணிக்கா உதவி தொடக்க பள்ளியில், என்னுடைய சித்தப்பாவும் ஒரு ஆசிரியர். வீட்டில் தொந்தரவு தாங்க முடியாததால், அம்மா, என்னை சித்தாப்பாவுடன் பள்ளி சேருவதற்கு முன்னாலே, அனுப்பி வைத்து விட்டார். அந்த வயதில், இரண்டு கிமீட்டர் தூரம் பைக் போவதற்கு, கேட்கவா வேணும். சும்மா…..ஒரு ரவுண்டு போய்ட்டு வர மாதிரி…. சற்று பயத்தோடு, சித்தாப்பாவின் இடுப்பை கெட்டியாய் பிடித்து கொண்டு…….டெய்லி போய்ட்டு வந்து விடுவேன்……

ஐந்து வயது முடிந்தவுடனே, பள்ளியில் முறைப்படி சேர்த்து விட்டனர். அப்போதே எனக்கு ஒரு டெஸ்ட், கெட் மாஸ்டர் வைத்தார். வேற ஒண்ணுமில்லை…. கையை தலையை சுத்தி காது தொடணும்…. பாஸ் பண்ணிட்டேன்…..ஏதே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி…. பெரிதாக சாதித்து விட்டதாக உணர்வு…….நானும் ஸ்கூல்ல சேர்ந்திட்டேன் என்ற காரணத்தினலா…… வாழ்க்கையின் என்னுடைய முதல் வெற்றி என்பதனலா….. அப்போது புரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவ்வளவு நாள் சித்தப்பாக தெரிந்தவர், திடீரென வாத்தியாராக மனதிற்கு பட சற்றே பயம் தொற்றி கொள்கிறது. அந்த ஆசை பயணத்திற்கே முடிவு கட்டி விட்டு, நடந்து செல்ல மனம் நினைக்கிறேன். ஆனால், அம்மாவின் எண்ணம் வேறு விதமாக இருந்தது. மகனின் மீதான அம்மாவின் பயமும் பாசமும் இயற்கை தானேஅதை மறுத்து அடி வாங்குவது எனக்கு துணிவில்லை….

இப்படியாக இரண்டு ஆண்டுகளாக, சித்தப்பாவோடு பயணம் தொடர்ந்தது. அதிலும் ஒரு வகை, லாபம் இருக்கத்தான் செய்தது. வாத்தியாரோடு வருகின்றவனுக்கு சற்று கூடுதலாக கவனிப்பும் சிலவற்றில் சலுகைகளும் கிடைக்க தான் செய்தன.

சற்று பயத்திலிருந்து விடை கிடைக்க, மூன்றாம் வகுப்பிலிருந்து கால் நடையாக செல்ல ஆரம்பித்தேன். பல மணல் மேடுகளையும் பல வயல்வெளிகளையும் கடந்து இயற்கையோடு அமைந்த இரம்மியமான பயணமாக அமைந்தது. சிலேட்டு அழிக்க தண்ணி பில்லை எடுத்து கொண்டும் நினைவுகள் கூட இன்னும் மறையவில்லை. மழைக்காலம் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. முழங்கால் மூட்டி தண்ணீரில், கால் சட்டையை மேலே தூக்கி கொண்டு, சற்று கவனமாக நடக்க வேண்டும். இல்லையேல், தண்ணீரில் துணி நனைந்து விடும்.

மூன்றாவது வகுப்பில் தான், முதன் முதலில் எ பி சி டி கற்று கொள்ள ஆரம்பித்தேன். பையின் கணம் அதிகமாக, மஞ்சள் பை தாங்க தால், நரம்பு பைக்கு மாற ஆரம்பித்தேன். அதுவும் அதிகம் கணம் இருந்தால், கையை வெட்டும் தன்மை கொண்டது. அதனால் கைகளை மாற்றி தோள்களை மாற்றி போட்டு கொள்ள வேண்டி இருந்தது.

ஐந்தாம் வகுப்பில், கூடை பைக்கு மாறி விட்டேன். இப்படியாக தொடக்க கல்வியின் காலம் வரை பேக்கை பற்றிய விழுப்புணர்வு இல்லாமலே கடக்க வேண்டி இருந்தது. பிறகு எப்போது ரப் அண்டு டப் பேக்கிற்கு மாறினேன் என்று நினைவு இல்லை.

கல்லூரி காலங்களில், டபுள் சைடு பேக், ஒன் சைடு பேக், ஜோலான பை வடிவிலான பேக் என்ற பல வடிவ மாற்றங்களை அடைந்து, இப்போது லேப் டாப் பேக்கை தோலில் மாட்டி கொண்டு, கிளினிக் சென்று கொண்டிருக்கிறேன். கடந்த கால் நூற்றாண்டு பயணத்தில், பையின் வடிவமும் அளவும் பொருளும் மாறினாலும், முதலில் எடுத்து சென்ற மஞ்சள் பை மட்டும், மனதை விட்டு மறையாது. முதன் முதலில் வாங்கிய பரிசு, வாங்கிய பேனா, முதற் கவிதை, முதற் பள்ளி, முதல் சம்பளம் போன்று முதன் முதலில் பயன்படுத்திய மஞ்சள் பையும் என்றும் தனி சிறப்பு தான்!!!!

இரண்டாம் வகுப்பில் நடந்த அப்பாவிதனமான ஒரு நிகழ்வு இன்னும் மறக்கவில்லை. இரண்டாம் வகுப்பு ஆசிரியர். கடல் பார்த்திருக்கிங்களா???...”என்று கேட்டார். நானும் தலை அசைத்தேன். எங்கு?...” என்று திரும்பி கேட்டார்.. நானும், “ எங்க வீட்டு திடல்ல போட்டு இருக்காங்க….!!!” என்றேன். இதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான் வரும்…….
 
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment