Monday, April 10, 2017

விவசாயமும் சமகால நிதர்சனமும்

விவசாயிகளின் கோரிக்கையின் நியாயங்களை தாண்டி, இங்கு நடக்கும் நிகழ்வு கவலை கொள்ளும் விதமாக அமைகிறது.

விவசாயம் என்பது முதன்முதலில் லாபம் பார்க்கும் தொழிலாகவே பார்க்கப்படவில்லை. ஆனால் உலக பொருளாதார கொள்கையினால், விவசாயமும் லாபகரமான தொழிலாக பார்க்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

சுமார் 20-30 வருடத்திற்கு முன்பு வரை, விவசாயம், தன் குடும்பத்திற்கு தேவையான உணவை உற்பத்தி செய்யும் விதமாகவே அமைந்தது (நிலவுடைமையில் பண்ணையார் தவிர). குடும்பத்தினர் அனைவரும் வேலை பார்த்தல், பருவத்தே கிடைக்கும் தண்ணீர், தரகர்களின் பிரச்சனை இல்லாமை, பணம் அதிகமாக வேண்டும் என்ற மனநிலை இல்லாமை என விவசாயம் சிறப்பாகவே நடந்தது.

ஆனால், இன்றோ…. அப்படியே தலைகீழ் நிலைமை……

விவசாய இடு பொருட்கள் விலை உயர்வு, அதிக விவசாயி கூலி, இடைத்தரகர்களின் கொள்ளை லாபம், விவசாய பொருட்களுக்கு விலை இல்லாமை, காலம் தவறிய மழை என பட்டியல் நீளும்.

விவசாயத்தில் லாபம் இல்லையென்பதால், விவசாய தொழிலை விட்டு விலக வேண்டியது தானே!?!? என்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. இது ஏற்புடைய வாதமாக இது தோன்றவில்லை. தொழில்துறையில் லாபம் இல்லையென்றால், அதனை விட்டு வெளியேறுவதே புத்திசாலித்தனம் எனலாம். அதனால் தான், இந்திய அரசு, பல பொதுதுறை நிறுவனங்களை தனியாரிடம் விற்கிறது. ஆனால், விவசாயத்தை, இத்தகைய முறையோடு முடிச்சிடுவது நல்லதல்ல.

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு தேவை அதிகம்
ஆதலால், ஏற்றுமதி என்பது உணவு துறையில் குறைவு. மேலும் 50 சதவீத மக்கள் முழுவதும் விவசாயத்தையே நம்பி உள்ளனர். ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 20 சதவீதம் மட்டுமே!!

விவசாயத்தை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் இருந்து உணவு பொருட்களை இறக்குமதி என்பது இயலாத காரியம். ஏற்கனவே இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யினால், டாலருக்கான ரூபாயின் மதிப்பு அதல பாதளத்தில் இருக்கிறது.

மேலும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தொழிற்துறை மற்றும் சேவைத்துறையில் மட்டுமே வேலை வாய்ப்பையும் அளித்து விட ,முடியாது.
விவசாயத்தில் உள்ளகளைகளை களைய வேண்டுமே தவிர, விவசாயத்தையே களையாக கருத கூடாது. விவசாயத்தை முன்னேற்ற குறுகிய கால மற்றும் நீண்ட கால தேவை அடிப்படையில் திட்டங்களை வகுக்க வேண்டும்.

பருவ கால மாற்றத்திற்கு பயிர்களை தேர்வு செய்ய வேண்டும். விவசாயத்தை தீண்ட தகாத துறையாக கருத கூடாது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment