ஒரு துறையின் வளர்ச்சியில், எழுத்து துறையின் பங்கு அளப்பறியது. அது அச்சு ஊடகம் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது அச்சிடப்பட்ட புத்தகமாகவும் இருக்கலாம்.
சித்த மருத்துவ துறையிலும், எழுத்து முறை சிறப்பாக பயணப்பட்டிருக்கிறது எனலாம். வாய்வழி செய்யுள் முறையில் தொடங்கி, ஒலைச் சுவடிகளை யெல்லாம் தாண்டி, இன்றைய அச்சு மற்றும் மின் ஊடகம் வரை சிறப்பாகவே செயலாற்றி கொண்டிருக்கிறது.
இருந்த போதிலும், சித்த மருத்துவர்களினை தாண்டி, பொது தளத்தில் சித்த மருத்துவ எழுத்துக்கள் பயணப்படவில்லை என்றே கூறுவேன். பரிபாஷை, இலக்கண வரம்பிற்குட்படாத செய்யுள், மறைக்கப்பட்ட செய்யுள்கள், முகலாயர் மற்றும் ஐரோப்பியரின் எழுச்சி போன்ற காரணங்கள் பல.
சித்த மருத்துவத்தை பொறுத்தவரை, இரு வகையான எழுத்துகளை முக்கிய மென்பேன். ஒன்று பொது தளத்திற்கான... சித்த மருத்துவம் சார்ந்த நூல்கள். இரண்டாவது சித்த மருத்துவர்களுக்கான ... சற்று ஆழமான, சித்த மருத்துவ ஆய்வு சார்ந்த நூல்கள். இரு வகையான நூல்களும் சேர்ந்து தான், மருத்துவ வளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.
முதல் வகையிலான பொதுத் தளத்திற்கான நூல்கள், சமீப காலமாக அதிகமாகி கொண்டே இருக்கிறது. அது சித்த மருத்துவமாக/நாட்டு மருத்துவமாக/ மூலிகை மருத்துவமாக... அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்றிருக்கிறது. குறிப்பாக சுரத்திற்கு நிலவேம்பு குடிநீர் போன்றவை. இவ்வகை நூல்கள், பொது மக்களை சித்த மருத்துவத்தை நோக்கி பயணப்பட முக்கியமானது.
இரண்டாவது வகையான நூல்கள், மிகவும் குறைவென்பேன். ஆனால், அதற்கான முன்னெடுப்புகள், சித்த மருத்துவர்களுக்கிடையே நடைபெற்று கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியே!!! . ஆயுர்வேதத்தினை காட்டிலும், சித்த மருத்துவத்தில் வேகம் மிக குறைவே!!!!
இவ்வகையான நூல்கள், சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்கும், நவீன உலகத்தின் ஒட்டத்திற்கு ஏற்ப நம்மை தயார் படுத்தவும் உதவும்.
இதையெல்லாம் தாண்டி, பொது வெளியில் உள்ள எழுத்தாளர்கள், சித்த மருத்துவத்தை பற்றி எழுத முன் வர வேண்டும்.
உங்களில் ஒருவன்
உங்களை போல்; ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment