Tuesday, July 21, 2015

உலக யோகா தினமும் அரசியலும்

இன்று உலகம் முழுவதும், உலக யோக தினம் வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டு வருகிறது. சித்தா, ஆயுர்வேதா என்ற பிரிவினை தாண்டி, இந்தியாவின் பாரம்பரிய(பண்பாடு) கலையினை, உலக நாடுகளனைத்தும் ஏற்று கொண்டுள்ளன. இது மகிழ்ச்சியான செய்தி என்பதில் சிறிதும் ஐயமில்லை. சித்த மருத்துவன் என்ற முறையிலும், அதை பயின்றவன் என்ற முறையிலும், யோகாவை உலக நாடுகளில் புகழடைய செய்த இந்திய அரசிற்கு, எனது நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

யோகா என்பதற்கு இணைதல்என்பது நேரடியான பொருள். அதாவது ஆன்மாவானது, இறைவனுடன் இணைந்து இரண்டற்ற இறவா நிலையை அடைய கூடியது ஆகும். அதனை வெறும் இருக்கை நிலை(posture) என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

யோகா என்பது, அஷ்டாங்க யோகம் என்றே நூல்களில் கூறப்பட்டு இருக்கிறது. அதாவது இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிராத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு படி நிலைகளை உடையது. இந்த படி நிலைகளில், ஆசனம் பிராணயாமம், தியானம் என்பவைகளே மட்டுமே கற்பிக்கப்படுகின்றன.

திருமூலரும் திருமந்திரத்தில் யோக நிலைகளை தெளிவாக விளக்கி உள்ளார். அதே போல, பதஞ்சலி முனிவரும் யோக நிலைகளினை விளக்கி உள்ளார். இதில் எது, அரசாங்கத்தினால் முன்னிறுத்தப்படுகிறது? என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக, பதஞ்சலி முனிவருடையதே.  இருவரும் யோக நிலையில் நன்கு கற்றுணர்ந்தவர்கள் என்பதினால், அடிப்படையில் வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. அதே சமயத்தில், இரண்டு நிலைகளினையும் ஒப்பிட்டு வெளிகொணர்ந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். யோகாவினை ஆயுர்வேதத்தின் ஒரு பகுதி என்று மட்டும் என்று வெளிகொணரப்படுவது, எந்நிலையிலும் ஏற்று கொள்ளத்தக்கது அல்ல.

யோகா மதம் சார்ந்தது என்று, எதிர்கட்சிகளால் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது நிச்சயமாக, இந்து மதத்தின் ஒரு பகுதி தான். ஒம் என்ற பிராணவ மந்திரமும், சூர்ய நமஸ்காரமும் மூஸ்ஸிம் மற்றும் கிருத்துவ மதம் சார்ந்தவர்களுக்கும் மன சங்கடத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். இதுவும் எதார்த்தமான ஒன்று தான்; அதுவும் மறுப்பதற்கில்லை. வெளி நாடுகள் பலவற்றில்(மூஸ்ஸிம் நாடுகளும் சேர்த்து) யோக பயிற்சி கற்பிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உள மற்றும் உடல் பயிற்சியாக, யோக பயிற்சியைனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்ப, யோக பயிற்சியின் சில வடிவங்கள் மாற்றப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. (ஷில்பா ஷெட்டி யோகா உள்பட)

இறைவனை அடைவதற்கான இந்து மதத்தின் ஒரு வழியே யோக பயிற்சியாகும். அதில் சில படி நிலைகளினை, நாம் உள மற்றும் உடல் பயிற்சிகளுக்காக எடுத்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விட கூடாது. அதே போல், ஒவ்வொரும் மதமும், இறைவனை அடைவதற்கான பல படி நிலைகளினை வகுந்துள்ளது. இவ்வாறு அனைத்து மதங்களுமே, உள(அக)  வளர்ச்சிக்கான படி நிலைகளையே கூறி வந்துள்ளது. தொழுகை நடத்துவதும், ஜெபம் பண்ணுவதும் நிச்சயமாக, ஆசன நிலையில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

யோக பயிற்சியை யாரிடம் கற்பது? என்பது, அடுத்த  மிகப்பெரிய பிரச்சனை. ஏனெனில், இன்றைய நிலையில், அனைத்தும் வணிகமாக மாறி விட்ட நிலையில், யோக பயிற்சியும் தப்பில்லை. இதுவும் எதிர் கட்சிகளினால், முன் வைக்கப்படுகிற மிக முக்கியமான குற்றச்சாட்டு. இதில் உள்ள உண்மையை மறுப்பதற்கில்லை. தன்னை யோக பயிற்சியில் அறிவந்தவர் என்று முன்னிறுத்தப்படுவர்கள் அனைவரும், வணிக நோக்கத்தையே முழு முதற்பொருளாக கொண்டவர்கள். அவர்களுடைய யோக பயிற்சிக்கு, உண்மையான யோக பயிற்சிக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளதை, கற்றுணர்ந்தவர்களால் நிச்சயமாக உணார்ந்து கொள்ள முடியும்.

யோக பயிற்சி பெற்ற மருத்துவர்களிடம், யோக பயிற்சியை மேற்கொள்ளலாம். நோயை தீர்க்கும் யோக பயிற்சிகள், பொதுவான உடல் மற்றும் உள நிலைக்கான யோக பயிற்சிகள் என்று பயிற்சிகள்  பலவுள்ளன. இதில் உங்களுக்கு எது என்பதை முடிவு செய்து, பயிற்சி மேற்கொள்ளுங்கள். யோகத்தை தவறாக பயிற்சி செய்யப்பட்டு, மன வேறுபாடு அடைந்த நபர்களையும், நான் பார்த்து இருக்கிறேன். ஆகவே, உங்கள் குருவை தெளிவாக தேர்ந்தெடுங்கள்.

இந்திய அரசு, யோக பயிற்சி முழுவதும், மதம் சார்ந்து எடுத்து செல்லுமானால், அது நல்பயனை நிச்சயமாக தந்து விடாது. இந்திய பண்பாட்டை குலைக்கும் செயலாகவே அமையும். இந்துவத்துவ எண்ணம் கொண்ட பாஜக கொண்டு வருகின்றது என்ற ஒரே காரணத்தினால், கண்ணை மூடி கொண்டு எதிர்கட்சிகள் எதிர்க்குமானால், சமூகத்திற்கு நல்லதல்ல. யோக பயிற்சியில் உள்ள நற்பலன்களை மட்டுமே மனதில் கொண்டு, நல்வாழ்க்கைக்கு வித்திடுவோம்!!!

பல ஆண்டுகளுக்கும் பிறகு, நானும் யோக பயிற்சியினை தொடங்கி விட்டேன். நீங்க எப்போ!!!!

||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||||||
|||||||||||உங்களை போல் ஒருவன்|||||
||||||||||||||||||||வேதை குமார் |||||||||||





No comments:

Post a Comment