Monday, November 27, 2017

சிறு தெய்வ வழிபாடும், கலைகள் அழிவும்


நேற்றைய தினம், அருகிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன். கனமான மழைக்கு பிறகு, சிறுவர்- சிறுமியர்களின் நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கனமான மழையினால், கூட்டங்கள் குறைந்து சேர்கள் காலியாக காட்சியளித்தது!!! மழை மட்டுமே காரணமா??? என்றால் நிச்சயமாக கிடையாது. மழை இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் 200 பேர் அதிகமாக வந்திருக்கலாம்!!!!

ஆக மொத்தத்தில்…… கோயில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை காண வரும் பொது மக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. சற்றே, 15-20 வருடங்களுக்கு முன் திரும்பி பார்க்கையில், சூழ்நிலையே வேறு!!!!

சரித்திர நாடகங்கள், குடும்ப நாடகங்கள், கூத்து பாடல்கள், சிலம்பாட்டம், திரைப்படம் என கலை நிகழ்ச்சிகளை காண வரும் கிராம மக்களின் எண்ணிக்கையை கணக்கிட இயலாது. ஏன்…. நானே, திரைப்படங்களை காண கோவிலுக்கு சென்று, இடம் பிடித்த தருணங்கள் கூட நினைவில் உள்ளது.

சுமார் 15-20 வருடங்களில், இத்தகைய கலாச்சார, பண்பாடு சார்ந்த சமூக மாற்றங்கள், நாம் அறியாமலே நடந்து கொண்டிருக்கிறது.

தொழிற்நுட்ப வளர்ச்சியினால், கலைத்துறையில் பெரியளவு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை அறிவியலின் வளர்ச்சி என்பதா??? சமூக மாற்றம் என்பதா???? கலாச்சார, பண்பாட்டு சீரழிவு என்பதா?? புரியவில்லை. ஆனால் நடக்கும் மாற்றங்களை ஏற்று கொண்டே ஆக வேண்டும்.

பல சரித்திர நாடகங்கள், குடும்ப நெடுந்தொடர்கள் என அனைத்தும் தொலைக்காட்சிகளில் நிரம்பி வழிகின்றன. திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்கள் மற்றும் இணையம் வழியே பெற்று கொள்ளலாம். மேலும் youtube வழியே அனைத்தும் கலைநிகழ்ச்சிகளையும், செல்போன் வழியே பார்க்கலாம். இணையம் மற்றும் காட்சி ஊடகங்கள் வழியே, அனைத்தும் கலைநிகழ்ச்சிகளும், பரவி கிடக்கும் போது, எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும்???? அதிலும் மிக துல்லியமான, தரத்தோடு கிடைக்கும் போது, எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும்????

மேலும், மக்களின் இறை நம்பிக்கை சார்ந்த புரிதலில், சிறிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. சிறு தெய்வங்கள், காட்டு தெய்வங்கள், ஊர் தெய்வங்கள் ஆகியவற்றின் மீதான் நம்பிக்கை சற்று தாழ்ந்துள்ளதாக எண்ணுகிறேன். அதே சமயத்தில், பெரு தெய்வ வழிபாட்டில் இறை நம்பிக்கை அதிகமாகி உள்ளது., சமகாலத்தில், கார்ப்பரேட் சாமிகளின் வளர்ச்சிகளே, இதற்கு உதாரணம்!!!!

இதையெல்லாம் தாண்டி, மேற்கண்ட கலை நிகழ்ச்சிகளின் புறக்கணிப்பால் பாதிக்கப்படுவதோ என்னவோ........ தமிழகத்தின் பராம்பரிய கலைகளும், தொழில்களும் தான்!!!! குயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், கூத்து என எத்தனை பராம்பரிய கலை நிகழ்ச்சிகள் முழுவதும் அழியும் நிலையில் உள்ளது,

ஒரு கோயிலில் திருவிழா நடைபெறுகிறது என்றால், அதனை சார்ந்து ஒரு இணை பொருளாதாரம் இயங்கும். பல சரக்கு கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், தின்பண்டங்கள் என்று பல குடும்பங்களின் வாழ்க்கை, அந்த இணை பொருளாதாரத்தை சார்ந்திருந்தது. அந்த பொருளாதார சங்கிலி
அறுக்கப்பட்டுள்ளது. அதற்கு நேர் மாறாக, மகா சிவராத்திரியில் நடைபெறும், மகா உற்வசம், இணை பொருளாதாரத்தின் மற்றொரு வடிவமாக மாறி உள்ளது.

மாற்றம் என்ற வார்த்தை மட்டுமே மாறாது!!!! மற்றெல்லாம் மாறுகின்ற உலக தத்துவம்!!! இவையெல்லாம் நல்லவையா??? கெட்டவையா??? என்பதனை காலம் தான் முடிவு செய்யும்.

முடிந்தால்….. கலைகளை அழியாமல் பாதுகாப்போம்!!! இல்லையென்றால், கலைகள் அழிக்கப்படுகிறது என்பதனை மட்டுமாவது தெரிந்து கொள்வோம்!!!!

உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment