Wednesday, August 16, 2017

வடகிழக்கு பருவ மழை- நோய் தடுப்பு முறைகள்


வடகிழக்கு பருவ மழையின் தொடக்கத்தினால், கோயமுத்தூர் மற்றும் கன்னியகுமாரி சார்ந்த பகுதிகளில், மழை பெய்ய தொடங்கியுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும், வெப்ப சலனத்தினாலும் மேலடுக்கு சுழற்சியினாலும், அங்கங்கே மழை பெய்து வருகிறது. இந்த பருவ கால மாற்றத்தினால், காய்ச்சல், சளி போன்ற மழை கால நோய்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம். அதிலும் வைரஸ் காய்ச்சல் அதிகமாக வாய்ப்புள்ளது. இந்நோய்களை, வந்த பின் காப்பதை விட, வரும் முன் காப்பதே சிறந்தது;

#காக்கும்_முறைகள்

எந்த குடிநீரையும் காய்ச்சி, வடிகட்டி வைத்து குடிக்க வேண்டும்.

தண்ணீர் தொட்டிகளை மாதம் இருமுறை சுத்தம் செய்யுங்கள்.

சமையலறை மற்றும் கழிப்பறை போன்றவற்றை தினமும் சுத்தம் செய்வது அவசியம்.

சுற்றுபுறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். காலி பாட்டில்கள், காலி டப்பாக்கள், உடைந்த பானைகள், பழைய டயர் போன்ற தண்ணீர் தேங்க கூடிய பொருட்களை அகற்ற வேண்டும். தண்ணீர் தேங்குவதை தவிர்த்தாலே, கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கலாம்.

சாப்பிடும் முன்னர், கைகளை நன்றாக கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.

எளிதாக சீரணமாகும் உணவு பொருட்களை உண்ண வேண்டும். மூன்று வேளைகளும் நேரம் தவறாமல் உணவு எடுத்து கொள்ள வேண்டும். நொறுக்கி தீனிகளை குறைக்கவும்.

உணவு சமைக்கும் போது, இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி பொருட்களாக, மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற அஞ்சறை பெட்டி உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு, அனைத்தும் அரசு சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

#நிலவேம்பு_குடிநீர்

5 கிராம் சூரணத்தை, 200 மிலிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். சுமார் 50 மிலிட்டர் வரும் வரை சுண்ட வைக்க வேண்டும்.

நிலவேம்பு குடிநீர் என்பது மொத்தம் ஒன்பது மருந்துகளின் கூட்டு சேர்க்கை. நிலவேம்பு, சுக்கு, மிளகு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், பற்படாகம், பேய்புடல், சந்தனம் மற்றும் கோரைக்கிழங்கு என 9 மருந்துகள் சேர்ந்தது!!!

குழந்தைகள்- 10 வயது வரை - 10 மிலி-15 மிலி வரை,
11-20 வயது வரை – 20 முதல் 25 மிலி வரை
அதற்கு மேல் - 50 முதல் 60 மிலி வரை

முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக, 3-5 நாட்கள்
தினமும் உட்கொள்ளலலாம்.

#நோய்_வந்த_பிறகு

நிலவேம்பு குடிநீர் 3- 4 வேளைகள், மேற்கண்ட அளவுகளின் படி குடிக்கலாம். இரத்த தட்டுகள் குறைவாக இருப்பின், பப்பாளி இலைச்சாறு, அன்னாசி பழம், ஆடாதோடை மணப்பாகு சேர்த்து கொள்ளலலாம். (உரிய மருத்துவ ஆசோசனைக்கு பிறகு).

எந்த சுரம் மற்றும் காய்ச்சலையும் அலட்சியம் செய்யாதீர்கள். அருகில் உள்ள அரசு மருத்துவமனை / அரசு ஆரம்ப சுதாகார நிலையத்திற்கு செல்லுங்கள். மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி உட்கொள்ளாதீர்கள்.

போலி மருத்துவர்களை அணுகாதீர்கள். முறையாக படித்த மருத்துவரையே அணுகுங்கள்.

நோய் தீவிர தன்மையை பொறுத்து, தேவைப்படின் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுங்கள்.
குறைந்தபட்சமாக 3 நாட்கள் மேலும், சுரம் இருப்பின் இரத்த பரிசோதனை அவசியம்.

திட உணவுகளை தவிர்த்து, திரவ உணவுகளை எடுத்து கொள்ளலலாம். ஒய்வும், உறக்கமும் அவசியம்.

மரு. பெ. இரமேஷ் குமார்,
சித்த மருத்துவ அலுவலர்
அரசு மருத்துவமனை
வேதாரண்யம்


No comments:

Post a Comment