Thursday, January 11, 2018

உழைப்பை மதிக்க தெரிந்த மனிதம் வேண்டும்


சில புரிதல்கள் எப்போதும், குழப்பம் நிறைந்தவை. ஒவ்வொரு மனிதனுக்கும் உழைப்பு ஏற்ப ஊதியம் கிடைக்க வேண்டியதை, பொருளாதார நீதி எனலாம். எந்த சமூகத்தினாலும், முழுமையாக பொருளாதார நீதியை கொடுத்து விட இயலாது. பிபிசியில் பணிபுரிந்து, தனது பதவியை ரஜினாமா செய்த கேரி கிரேசி தான், மிக சமீபத்திய எடுத்துக்காட்டு!!!! மிகச்சிறந்த நிறுவனமாக கருதப்படும் பிபிசியில் கூட, பாலினம் சார்ந்த பொருளாதார சமத்துவமின்மை நிலவுகிறது.

அப்படியிருக்கையில், இந்தியா போன்ற மூன்றாம் தர உலக நாடுகளில், பொருளாதார சமத்துவமின்மை மிக கடினமானதே!!!

நாம் பெரும்பாலும் உழைப்பை இரண்டு வகைகளில் புரிந்து கொள்கிறோம். ஒன்று. உடலுழைப்பு; மற்றொன்று மன உழைப்பு. உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டும் இணைந்து உழைக்கின்ற புரிதலை, மூன்றாவது நிலையாக கூட எடுத்து கொள்ளலாம்.

இந்திய சமூகத்தில், உடலுழைப்பு சார்ந்த வேலைகளுக்கு, குறைவான ஊதியமும், மன உழைப்பு சார்ந்த பணிகளுக்கு, அதிக ஊதியமும் வழங்கப்படுகிறது. இவ்வகையான சமத்துவமின்மை சரியா?? என்றால் நிச்சயமாக கிடையாது. ஆதலால், சமத்துவத்தை நோக்கிய பயணம் அவசியமாகிறது.

அறிவு திறன் மிகுந்த வேலைகளில் ஈடுபடுவர்களுக்கு, ஊதியம் அதிகம் என்பது இயல்பானதே!!! அவர்களின் திறமை, கல்வி ஆகியவற்றால், ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. உடல் உழைப்பு சார்ந்த பணிகளுக்கு, மேற்கண்டவை பெரும்பாலும் எதிர்பார்க்க படுவதில்லை. ஆதலால் ஊதிய நிர்ணயமும் குறைவு.

இன்றைய சூழ்நிலையில், அன்றாட கூலிகளின் தினசரி வருமானம் 250-500 வரை வேறுபடும். ஆனால், சேவை துறைகளில் ஈடுபடுவர்களின் தினசரி வருமானம், 500-1000 வரை உண்டு.

மேற்கத்திய நாடுகளில், பொருளாதார இடைவெளி குறைந்து காணப்படுகிறது. அதற்காக, உடலுழைப்பு மற்றும் மன உழைப்பு ஆகிய இரண்டுக்கும் சம ஊதியம் என்று எடுத்து கொள்ள கூடாது. இந்தியாவில் இவ்வகையான மாற்றங்களுக்கு சில காலங்கள் எடுத்து கொள்ளும்.

ஆரம்ப காலங்களில், மன உழைப்பு சார்ந்த பணிகளை நோக்கி அனைவரும் படையெடுப்பார்கள். அடுத்த நிலையாக, உடலுழைப்பு பணியாளர்களின் எண்ணிக்கை குறையும். தொடர்ச்சியாக…….. உடலுழைப்பு பணியாளர்களின் தேவை அதிகமாகி, ஊதியமும் அதிகமாகும். இத்தகைய சமத்துவ நிலையை, சமூகம் தன்னை தானே சுவகரித்து கொள்ளும் என்று எண்ணுகிறேன்.

இந்த இடத்தில், இன்னொரு விஷயத்தை புரிந்து கொள்வது அவசியம்!!! உடலுழைப்பு என்பது கண்ணால் காண கூடியது. மன உழைப்பு என்பது கண்ணால் காண முடியாது. ஆதலால், உடல் உழைப்பு மட்டுமே கஷ்டம் என்ற புரிதல் பொது சமூகத்திடம் உள்ளது. இது தவறான புரிதல்!!! மன உழைப்பு சார்ந்தவர்களுக்கான கஷ்டங்கள் வெளி புரிதலுக்கு அப்பாற்பட்டது. அதனால் என்னவோ, மன உழைப்பு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகம் என்று எண்ண தோன்றுகிறது.

உழைப்பு சார்ந்த ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டிய அவசியம். ஆனால், வளரும் நாடுகளில், இச்சமநிலையை உடனே எதிர்ப்பார்க்க கூடாது. அதே போல், உடலுழைப்பு சார்ந்தவர்களை குறைத்து மதிப்பீடு செய்வதும் கூடாது; மன உழைப்புள்ளவர்களுக்கு, அதீத புகழ்ச்சியும் தேவையில்லாதது;

உழைப்பை மதிக்க தெரிந்த மனிதம் வேண்டும்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment