Wednesday, July 19, 2017

மனப்பாடம்- ஒரு திறமையா? மாயையா?


எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்ததாக நினைவு!!! திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், எனக்கு தெரியாமலே என் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. மொத்தம் 8 அதிகாரங்களாக, 80 குறட்பாக்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும்!!!!

70 குறட்பாக்களை கூட தாண்டவில்லை என்று நினைக்கிறேன். மனப்பாடம் செய்வதென்றால் எவ்வளவு கடினம். ஆனால், இன்றைய குழந்தைகள், இதையெல்லாம் சிறப்பாக செய்கின்றார்கள்.

சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில்…… இரண்டாம் வகுப்பு மாணவன் கூட திருக்குறள், குறிஞ்சுப்பாட்டில் உள்ள மலர்கள், அறுபது தமிழ் வருடங்கள் என பட்டையை கிளப்புகின்றனர். பரிணாம வளர்ச்சியினால், மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் திறனும் அதிகமாகி வருகிறது.

இந்த குழந்தைகளின் திறமையை பாராட்டும் அதே நேரத்தில், இத்திறமை மீது மாற்று பார்வையை வைக்க விரும்புகிறேன்!!! ( இது சரியா தவறா என்று தெரியாது. ஆனால், சிந்தையில் உதித்ததை கேள்வியாக, உங்கள் முன் வைக்கிறேன் )

இத்தகைய செயல்களால் மனப்பாடம் செய்யும் திறன் அதிகமாகி வருகிறதே தவிர, சிந்தனை திறன் வளர்ந்ததாக தெரியவில்லை. இத்தன்மையின் நீட்சியே….. இன்றைய மனப்பாட செய்து வாந்தியெடுக்கும் 10,12 வகுப்பு மாணவர்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

இவ்வாறு மனப்பாடம் செய்யும் திறமையையே….. வாழ்க்கையின் வெற்றி புள்ளி என்று குழந்தை மனதில் பதிய வைக்கிறோம். அதையும் குழந்தைகளும் உண்மை என நம்பி வளர்கின்றன.

ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களில், நன்றாக மனப்பாடம் செய்து பரிட்சையில் நூறு சதவீதம் எடுக்கும் மாணக்கரையே, வகுப்பின் சிறந்த மாணவன் என்று மெய்ப்பிக்கிறோம். மாறாக சிந்தனை திறன் மிகுந்த மாணவனையும், படிப்பினை தாண்டி மற்றவற்றில் ஆர்வம் இருக்கும் மாணவனையும், திறமையற்றவன் என்ற புரிதல் மறைமுகமாக மெய்ப்பிக்கப்படுகிறது. பாடத்திட்டத்தினை தாண்டி, திறமையை மதிப்பீடுவதில் உள்ள குறைபாடே!!!!

இதையெல்லாம் செய்து விட்டு, வேலை தேடி அலையும் போதும், குடும்ப வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் போதும், இளைஞர்கள் கஷ்ட படுகின்றனர். இந்நிலையை வைத்து கொண்டு, கற்ற கல்வியின் மீது நம்பிக்கை குறைகிறது; விமர்சனம் வைக்கப்படுகிறது; ஏட்டு சுரக்கரை கறிக்கு உதவாது என்ற பழமொழி யெல்லாம் உதாரணம் காட்டப்படுகிறது.

மனப்பாடம் ஒன்றே வெற்றிக்கான வழி என்ற புரிதலை, காலம் காலமாக (பள்ளி கல்வி, கல்லூரி கல்வி மற்றும் வேலை பெறுதல்) மறைமுக போலிப்பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு, திடீரென்று கல்விக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. எத்தனை அபத்தங்கள்!!!

இந்த போலிபிம்பத்தை குழந்தையிலேயே தொடங்கி, மழலைகள் மழங்கடித்து விடுகிறோமோ என்ற கேள்வி என்னுள் எழுகிறது. விடைகள் ஏதும் கிடைக்குமா????

(சித்த மருத்துவத்தின் வழி சொல்ல வேண்டுமென்றால், கப உடம்பினர் மனப்பாடம் செய்வதில் வல்லவர்கள்; ஆதலால், அந்த உடம்பினரே வெற்றியாளராக சமூகம் நம்பிக்கை கொள்கிறது )

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment