Monday, April 15, 2019

கஜா புயலும் தேங்காய் விளைச்சலும்


நேற்றைய தினம், தமிழ் புத்தாண்டு என்பதால்…. தேங்காய் வாங்க கடையிற்கு சென்றிருந்தேன். “ என்ன சார்…. தேங்காய் யெல்லாம் வாங்க வந்திருக்கீங்க!!! தேங்காய் விற்ற காலமெல்லாம் போயிற்றாஎன்றார் கடைக்கார அண்ணாச்சி.

மவுனமே பதிலாக, தேங்காயை வாங்கிட்டு வந்தேன்!! ஏன் இந்த மாற்றம்???

ஆம்!! நீங்கள் நினைப்பது உண்மை தான்!!! கஜா புயல் அடித்து, சரியாக ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது. அது ஏற்படுத்திய பாதிப்புகளே இவையெல்லாம்!!!

எனக்கு நினைவு தெரிந்தவரை, தேங்காயும் வாங்கியதில்லை!!! தேங்காய் எண்ணெயும் வாங்கியதில்லை!!!! மாறாக விற்று தான் இருக்கிறோம்!!! ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ்!!!!

கஜா புயலினால் வீடுகளை இழந்தோம்!!! ஆனால் அதை தாண்டி எராளமான மரங்களை இழந்தோம்!!! கஜா புயலினை தொடர்ந்து, ஒரு வாரத்தில் மழை பெய்தது. அதற்கு பிறகு, வடகிழக்கு பருவ மழை பொய்த்து விட்டது. ஆதலால், இந்த கோடை மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவே வாய்ப்பிருப்பதாக தோன்றுகிறது.

மார்சு மாத இறுதியிலிருந்தே….. வெயில் தாக்கம் அதிகமாயிற்று!!! பகலில் அனற்காற்று வீச தொடங்கி விட்டது. முந்தைய வருடங்களில், கடலோர மாவட்டம் என்பதால், வெயிலின் கொடுமை அதிகமே இருக்கும். இந்த வருடத்தில், மரங்கள் முழுவதும் வீழ்ந்தபடியாலும், பருவமழை பொய்த்தாலும் நிலைமை மோசமாகி விட்டது.. மரங்களை மறுபடியும் நட்டு வளர்ப்பது கூட மிக கடினம்!!!

ஐந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும், இன்னும் 20 சதவீத வீடுகள் தார்பாலின் பாய்களிலே வேய்ந்து நிற்கிறது. தென்னங்கீற்றின் விலை, விண்ணை முட்டுகிறது. புயலின் வீழ்ந்த மரங்கள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. எங்களது வீட்டில் கூட சவுக்கு, மாமரம் போன்றவைகளை இன்னும் தொடவில்லை!!!

விழுந்த மரங்களை வெட்டி விற்றாலும் போதிய விலை இல்லை!!! ஆதலால் அகற்றவில்லை. ஆனாலும், நெல் விளைச்சல் இந்த வருடம் சிறப்பாக இருந்தது. ஆனாலும் விலை இல்லை!!! ”ஆடு, மாடுகளுக்கு உணவிற்காக புல், தழை கிடைக்காதுஎன்பதால் பெரும்பாலனோர் விற்று விட்டனர். மீதமிருக்கின்ற ஆடு மாடுகளுக்காக வைக்கோல் மற்றும் கடலை தழையின் விலையும் அதிகம்!!!!

முந்திரி, சவுக்கு, தென்னை, மாமரம் போன்றவை நீண்ட கால அடிப்படை பலம் தரக்கூடியவை!!! இவை இப்பகுதி மக்களுக்கு வாழ்வதரமாகவும், சில இடங்களிலும் உபரி வருமானமாகவும் இருக்க கூடியவை!! இதை முழுவதும் இழந்து நிற்கின்றனர்!!!

இயற்கை சீரழவிற்கு பிறகு, மறுகட்டுமானம் செய்வதற்கான திட்டமிடலும், போதிய மூலதனம் இருந்ததால் மட்டுமே முழுவதும் மீள இயலும். ஆனால் அதற்கான முன்னெடுப்புகள் இருப்பதாக தெரியவில்லை. தற்காலிக தீர்வை மட்டுமே பெரும்பாலும் யோசிக்கிறோம்!!! காலம் தான் அதற்கு பதில் சொல்லும்!!!
----------------------------------------------------------
கஜா புயல், தனிப்பட்ட முறையிலும், சமூக ரீதியாக மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான மன தைரியத்தை எனக்கு தந்தது என்றால் மிகையல்ல!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment