Sunday, November 23, 2014

கல்லூரியின் முதல் நாள் அனுபவம்

இன்று காலையில்-28/10/14 (பேஸ்புக்கை திறந்த போதும் தான்) இதே நாளில் தான், நாமெல்லாம் கல்லூரியில் சேர்ந்தோம்  என்று விக்ரம் குமார் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். அரசு கல்லூரியாக இருந்திருந்தால், அந்த நாளை batch day என்ற பெயரில், அனைவருக்கும் நினைவில் இருந்திருக்கும். தனியார் கல்லூரியில் படித்தால் என்னவோ, அந்த வாய்ப்பு கிட்டவில்லை. ¾ மதிப்பெண் அதிகமாக பெற்றிருந்தால், அந்த வாய்ப்பும் கிடைத்திருக்கலாம். ஆனால், இத்தகைய நட்பு கிடைத்திருக்குமா?? என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

கல்லூரி தொடங்குவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன்னர் காலில் சிறிது அடிபட்டு விட்டது. அதனால் கட்டு போட்டு கொண்டே, சென்னைக்கு கிளம்பினேன்.

கால் கட்டோடு, புதுசாய் வாங்கிய shoe வோடு, கஷ்டப்பட்டு நடந்த நினைவுகள் கூட மறையவில்லை. அறிமுக விழாவும் நடைபெற்றது. புது புது சொந்தங்கள், நட்பின் ஊடே கிடைத்தது.

இதோடு டாய்பாய்டு காய்ச்சல் சேர்த்து கொண்டது. மற்றவர்களின் பார்வையில், ”ஹோம்சிக்என்ற கூட தெரிந்தது. சில நாட்களுக்கு, கல்லூரிக்கு போக முடியாத நிலை ஏற்பட்ட போது, புது வகுப்பில் தனி ஆளாய் உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டது.

பள்ளி பருவ காலங்கள் எல்லாம், அரசு பள்ளியிலே முடிந்து போயின. வீட்டில் இருந்தே பள்ளிக்கு சென்றதால், ஹாஸ்டல் வாழ்க்கை என்னவென்று தெரியாமல் இருந்தது. இதை தான் படிக்க வேண்டும் என்ற திட்டமிடல் கூட சரியாக இருந்ததில்லை. இதை படித்தால் நல்லது என்ற முறைப்படுத்த கூட சரியான வழிகாட்டுதல் கூட இல்லை. எதோ படிக்கிறோம் என்ற  புரியாத மனநிலையோடு, பள்ளி பருவ காலம் முடிந்தது.

கல்லூரியை பற்றியும், ஹாஸ்டலை பற்றியும், எந்த்தொரு எதிர்ப்பார்ப்பு இல்லாததால், கல்லூரி காலங்கள் பெரியளவுக்கு வெறுப்பை தந்ததில்லை. மாறாக அனுபவத்தை தந்து இருக்கிறது. 

கல்லூரி வகுப்பறை, ஹாஸ்டல் வாழ்க்கை, தனியாக ரூம் எடுத்து தங்கியது, கல்வி சுற்றுலா, மருத்துவமனை பயிற்சி என்று ஒவ்வொரு இடமும், ஒவ்வொரு வகையான புத்தக அறிவையும், அனுபவ அறிவையும் தந்தது. சக மாணவர் நட்பு, ஆசிரியர்- மாணவர் நட்பு என்று பல புரியாத புதிருக்கெல்லாம் விடை கிடைத்தது.

தாவரங்களில் தேடி அலைந்த தருணங்கள், மருந்து தயாரிக்கும் போது நடந்த சுவையான நிகழ்வுகள், ரோகிணி, வி.ஹச். எஸ் பயிற்சி, சதுர கிரி மலையேற்றத்தின் போது நடந்த நிகழ்வுகள், வருட வருட கலை நிகழ்ச்சி, NSS கேம்ப் என ஒவ்வொரு தருணங்களும் நினைவில் இருந்து நீங்க மறுப்பவை.

நாங்க ஒன்பது பேர், ஒன்பது பேரும் நவகிரகங்கள் மாதிரி என்று  அடிக்கடி சொல்லி கொள்ளுவது உண்டு. ஒவ்வொருவரும் வேறு மாதிரியான மனநிலையோடு இருந்தாலும், நட்பு என்ற ஒன்றில் ஒருமைப்படுத்த கூடியவர்கள்.

காலங்கள் கடந்தாலும், சூழ்நிலை மறந்தாலும், நினைவுகள் தான் வாழ்வினை அழகாக்க கூடியவை. எத்தனையே துன்பங்களையும், இன்பங்களையும் கல்லூரி வாழ்க்கை தந்திருந்தாலும், இவையெல்லாம் பசுமை பொருந்திய நினைவுகளாக வலம் வந்திருக்கிறது.

இன்றோடு, கல்லூரி வாழ்க்கையில் நுழைந்து பத்தாண்டுகள் கடந்து விட்ட நிலையில், காயம் பட்ட நேரத்தில், மருந்திட்ட நட்புகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment