Thursday, January 17, 2019

பொங்கலும் சுயசார்பும்


கிராமபுறங்களில் பொங்கல் என்றாலே…. அது மாட்டு பொங்கல் தான் !!!! அது சமீப காலங்களில் மிகவும் குறைந்து வருகிறது. எனது வீட்டினை சுற்றியும்….. சுமார் 20-30 வீடுகளில் மாடுகள் இருந்த நிலை குறைந்து தற்போது 2-3 வீடுகளாக சுருங்கி விட்டது. மாட்டு பொங்கலன்று உடைக்கப்படும் திருட்ஷ் சட்டிகளும் சாலைகளில் குறைந்தே காணப்படுகிறது.

சுமார் 15 வருடத்தின் முன்எனது வீட்டிலும் மாடுகள் இருந்தது. 4-5 லிட்டர் வரை பால் கறக்கும். ஆனால் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத நிலையினால், அதையும் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். பிறகு மற்றவர்கள் வீட்டிலிருந்து பசும்பால் வங்கினேன். பிறகு, அவர்களும் மாடுகளினை விற்க , பாக்கெட் பால் வாங்கும் நிலைக்கும் வந்துவிட்டோம்.

இது எங்கள் வீட்டின் நிலைமையே!!! இது போல் பல கிராம புற வீடுகளின் கதையும் வேறுமாதிரியாக இருக்கும். மாட்டிற்கு வைக்கோல் இல்லாத நிலை, அதை பராமரிப்பு செலவு அதிகம், விவசாயம் பொய்த்தது, கிராமபுறங்களில் வேலையில்லாததால் நகரத்தினை நோக்கிய பயணம் என பல்வேறு காரணங்களை அடுக்கலாம். இதையெல்லாம் தாண்டி…. மனிதனின் சோம்பேறித்தனம் முக்கியம் எனலாம். ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மாடு வளர்க்கிறது விட, பாக்கெட் பால் என்ற மனநிலை மாற்றம் முக்கியம் காரணம் என்பேன்.

இதற்கு இன்னொரு புறமாக, பாலின் உற்பத்தியை அதிகமாக்குவதற்காக….. மேலை நாடுகளின் கலப்பின பசுக்கள் கிராமபுறங்களில் ஊடுருவி விட்டது. ஆதலால்கிராமங்களில் இருக்கும் காளை மாடுகள் முழுவதும் அழிந்து விட்டது எனலாம். அதன் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். சினை ஊசிகள் வந்து, காளைகளை முழுவதும் அழிந்து விட்டது.

இந்த தருணத்தில் தான்……. ஜல்லிக்கட்டு குறித்த பிரச்சனைகள் தொடங்கின. ஜல்லிக்கட்டு நடத்தினால், தமிழர் பராம்பரியம் காக்கப்படும்;நாட்டு மாடுகள் காக்கப்படும் என்ற கோஷங்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சிறிதளவு உண்மை இருக்கிறது என்றாலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் முழு வெற்றியை தந்து விடாது.

நமது ஆரோக்கியத்தையும் சுய சார்பையும் முழுவதுமாக ….. நவீனத்துவ உலகில் ஒப்படைத்து விட்டு, டிவியில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து புல்லரித்து கொண்டால், வீழ்வது நாம் தான்!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment