Friday, October 16, 2015

ஹிந்துவின் கட்டுரையும் எதிர்வினையும்

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள், தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரையினால், சித்த மருத்துவர்கள் அனைவரும் சற்று கோபமான மனநிலையோடு இருப்பீர்கள் என்று உணர்கிறேன். ஒருவர் தம் மீதும், தன்னுடைய மருத்துவத்தின் மீதும் விமர்சன்ங்களை தொடுக்கும் போது, உணர்ச்சி பூர்வமான கோபப்படுவதே இயற்கையே. அந்த விமர்சன்ங்களை, உணர்ச்சி பூர்வமாக அணுகாமல், அறிவு பூர்வமாக அணுக வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், CSIR இயக்குனர் சர்க்கரை நோயிற்காக மூலிகை மருந்தினை உட்கொண்டு, அதனுடைய நஞ்சு தன்மையினால், இறந்து போனார். அப்போதும் கிருஷ்ணன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அதற்கு நானும் எதிர்வினை ஆற்றினேன். ஆனால், இந்த கட்டுரையில், அவருடைய கருத்தியலோடு பல இடங்களில் நானும் ஒத்து போகிறேன்.

சித்த மருத்துவம் என்பது வாழ்வியலோடு பயணிக்கிறது; பக்க விளைவுகற்றது; முழுமையாக குணமாக்க கூடியது என்ற உண்மைகளை யாராலும் மறுக்க இயலாது. கடந்த பத்தாண்டுகளில், சித்த மருத்துவத்தின் வளர்ச்சி என்பது இமலாய உயரத்தினை ஒத்தது.

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், தினமும் வெளிநோயாளிகளாக  2000 முதல் 3000 வரையிலான நோயாளிகளும், உள் நோயாளிகளாக 150 பேரும் பயன் பெறுகிறார்கள் என்பதே சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு உதாரணம். டெங்கு மற்றும் சிக்கன் குனியா  போன்ற நோய்கள் தாக்கிய போதும், ஆங்கில மருந்துகள் கைவிரித்த நிலையிலும், சித்த மருந்துகள் கைக்கொடுத்தன. இதனால் prevalence incidence குறைந்தது என்பது உண்மை.

நான் ஜெய்பூரில் நடைபெற்ற ஆரோக்யா நிகழ்விற்கு சென்ற போது, ஆயுர்வேத மருத்துவத்தை தாண்டி, சித்த மருத்துவத்தை நாடி வந்த மக்கள் கூட்டம் அதிகம். இதில் அதிசயம் என்னவென்றால்தேசிய ஆயுர்வேத மருத்துவ நிறுவனம் ஜெய்பூரில் தான் உள்ளது.

இத்தகைய பெருமைகள் எல்லாம், நமக்கு மட்டும் தான் தெரியும். இந்த உலகத்திற்கு யார் சொல்வது? யார் சொன்னது?? யாரும் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும் போது கிருஷ்ணனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதே சமயத்தில் சித்த மருத்துவத்தின் தோற்றம் பற்றி விமர்சனம் கடும் கண்டனத்திற்கு உரியது. மதத்தின் நம்பிக்கை மீதான கேள்வி கேட்பது நியாயம் இல்லையே, அதே போல, சித்த மருத்துவத்தின் தோற்றம் பற்றிய விமர்சனமும் எள்ளவும் ஏற்க இயலாது.

அன்றாட செய்தித்தாள்களில், ” அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் அகற்ற முடியாத கட்டியினை அகற்றி சாதனை படைத்தனர்என்று படித்திருப்போம். அது போல், நாம் செய்த மருத்துவ சாதனைகளை, எப்போதாவது வெளி உலகிற்கு எடுத்து சொல்லி இருப்போமா???

தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக பணிபுரியும் நண்பர் ஒருவர், பல தீர்க்க முடியாத நோய்களுக்கு கிடைத்த வெற்றியை என்னிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், அந்த வெற்றியை ஊடகங்களில், இதை வரைக்கும் பதியவில்லை என்பது வேதனையின் உச்சம். அதுபோல்மருத்துவ இதழ்களுக்கு case review அனுப்பி இருப்போமா??.

அதாவது சித்த மருத்துவத்தினை மக்கள் முன்னால், நாம் முழுமையாக கொண்டு சேர்க்க முடியவில்லமுயலவில்லை. ஏன் பிரதமர் தேர்தலில் மோடி பெற்ற வெற்றிக்கு, மக்களிடம் கொண்டு சென்ற மார்க்கெட்டிங் உத்தியே முதற்காரணம்.

ஏன் டெங்கு மற்றும் சிக்கன் குனியாவின் போது என்ன நடந்தது?? சித்த மருத்துவத்தினால், டெங்கு மற்றும் சிக்கன் குனியாவிற்கு மருந்து உண்டு என்பதை எந்த கல்வி நிறுவனமும் சொல்ல  முன் வரவில்லை. தமிழக அரசும் முன்னிறுத்திய பிறகு, clinic study, toxicity study, pre-clinical study போன்ற ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்ததாக தெரியவில்லை.

ayush portal, pub net , science direct போன்ற இதழ்களில், கிருஷ்ணன் சொல்வது போல, சித்த மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளின் எண்ணிக்கை மிக சொற்பமே. அதை பார்த்தவகளுக்கு நன்கு அறிவர். முதுகலை பட்ட படிப்பில், ஆராய்ச்சி கட்டுரை கட்டாயமாக்கப்பட்ட பிறகு, நமது மருத்துவ மாணவர்களும், மருத்துவ பேராசிரியர்களும் எத்தனை கட்டுரை ஆராய்ச்சி கட்டுரைகளை இதழ்களில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

சித்த மருத்துவம்-பொது, சித்த மருத்துவ பரிகாரம் போன்ற நூல்கள் பதிக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டன. அதனை புதுப்பிக்க நாம் என்ன முயற்சி செய்திருப்போம். விடதாரி சூரணத்தின் அளவு 10-5 நெல்லெடை என்று சிறப்பு மருத்துவத்தில் உள்ளது. இதை திருத்துவது யார்??? உதவி மருத்துவ அலுவலர் பணிக்கான தேர்வின் போதும், அப்படியே கேள்வி கேட்டது, எவ்வளவு நகைப்புரியது.

16 நூற்றாண்டில் வணிகம் செய்ய வந்த போர்த்துகீசியர்களே அன்னாசி, பப்பாளி, மிளகாய் மற்றும் புகையிலை போன்ற தாவரங்களை இந்தியாவிற்கு கொண்டு வந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. ஆனால், நாம் அதற்கு அகத்தியர் எழுதியததாக உள்ள பாடலை படித்து கொண்டிருக்கிறோம். இது ஆய்வுக்கு உட்பட வேண்டியுள்ளது.

ஒர் சித்த மருத்துவ மாணவன், பட்ட படிப்பை முடித்து வெளியே வரும் போது, யாரை அளவு கோலாக கொண்டு, அவனால் சித்த மருத்துவம் செய்ய தொடங்க இயலும். அப்படிப்பட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஒரு சிலரை தவிர!!!! அவனுக்கு எப்படி தன்னம்பிக்கை எப்படி வரும்??? டிவி பெட்டிகளில் விடிய விடிய கத்தும், சித்த மருத்துவர்களே கண்ணில் படுகின்றார்கள்.

சித்த மருத்துவத்தை முன்னேற்றுவதற்கு நடக்கும் போராட்டங்களை காட்டிலும், தன்னை பாதுகாப்பிற்கான நடக்கும் போராட்டங்களே அதிகம்.
உலகத்தில் உள்ள அனைத்தும் விமர்சனங்களுக்கு உட்பட்டது. விமர்சனங்களே செய்ய கூடாது என்று சொல்ல முடியாது. அதனை அறிவு பூர்வமாக எதிர்க்க வேண்டும். நல்ல விமர்சனங்களை ஏற்று முன்னேறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அறிவியல் பூர்வமாக முழுமையாக நிருபிக்க முடியாதென்றாலும், குறைந்த பட்சமாகவது அறிவியலை கொண்டு நிருபிக்க வேண்டும்.

மெய்ஞானம் விஞ்ஞானம் எதிர் எதிர் பாதையில் பயணிப்பவை. அதை நிருபிக்க இயலாது என்று வாய் வார்த்தை பேசி கொண்டிருந்தால், சித்த மருத்துவம் நவீன உலகத்தினால் ஏற்க படாமலே இருக்கும்.

எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந் தோமில்லை.
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!என்ற பாரதிதாசன் வாக்கை போல், சித்த மருத்துவம் வளர்ப்போம் வாரீர்உலகத்தோடு ஒன்றி…..

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment